Tuesday, May 30, 2023

குறுந்தொகை 244 - அறனில் யாயே

குறிஞ்சி - தோழி கூற்று

பல்லோர் துஞ்சு நள்ளென் யாமத்து
உரவுக் களிறு போல் வந்து இரவுக் கதவு முயறல்
கேளேம் அல்லேம் கேட்டனெம் பெரும
ஓரி முருங்கப் பீலி சாய
நன்மயில் வலைப்பட்டாங்கு யாம்
உயங்குதொறு முயங்கும் அறன் இல் யாயே.

-கண்ணனார்.

துஞ்சும் - தூங்கும். யாமம் - நள்ளிரவு. உரவு - வலிமை. களிறு - யானை. முயறல் - முயற்சி. ஓரி - கொண்டை. முருங்க - அழிய. சாய்தல் - மெலிதல். உயங்குதல் - அசைதல். முயங்குதல் - தழுவுதல். யாய் - தாய்.

தலைவியை சந்திக்க விரும்பி நள்ளிரவில் வந்த தலைவன் வாயில் புறத்தே நிற்கும்போது, தோழி சொன்னது.

எல்லோரும் தூங்கும் நள்ளென்ற நடுச்சாமத்தில்
வலிமையான யானை போல் வந்து
நீ கதவைத் திறக்க முயலும் ஒலியை
கேட்காமல் இல்லை.
கேட்டோம் தலைவனே.
கொண்டை முறிய, தோகை நசுங்க
வலையில் அகப்பட்ட மயில் போல உள்ளோம்.
நாங்கள் அசையும் போதெல்லாம்
இறுக்கித் தழுவுகிறாள்
அறமற்ற அன்னை.

No comments:

Post a Comment