Friday, May 26, 2023

குறுந்தோகை 209 - மையிருங் கூந்தல் மடந்தை நட்பு

பாலை - தலைவன் கூற்று

அறம் தலைப்பட்ட நெல்லி அம் பசுங் காய்
மறப் புலிக் குருளை கோள் இடம் கறங்கும்
இறப்பு அருங் குன்றம் இறந்த யாமே
குறுநடை பல உள்ளலமே நெறிமுதல்
கடற்றில் கலித்த முடச் சினை வெட்சி
தளை அவிழ் பல் போது கமழும்
மை இருங் கூந்தல் மடந்தை நட்பே.

-பாலை பாடிய பெருங்கடுங்கோ

மறம் - வலிமை. குருளை - குட்டி. கோள் - கொள்ளுதல். கறங்கும் - உருளும். இறத்தல் - கடத்தல். கடறு - காடு. உள்ளுதல் - நினைத்தல். நெறி - பாதை. கடறு - காடு. கலித்த - மலர்ந்த. முடச்சினை - வளைந்த கிளை. வெட்சி - ஒரு மலர். போது - அரும்பு. மை - கருமை. நட்பு - காதல்.

பொருள் ஈட்டித் திரும்பிய தலைவன், வீட்டு வாயிலில், தோழிக்குச் சொன்னது.

(வழிப்போக்கர்களின் பசி போக்குவதான)
அறத்தைச் செய்யும்
நெல்லி மரத்தின் பசுங்காய்களை
வலிமையான புலிக்குட்டிகள் உருட்டி விளையாடும்,
கடத்தற்கரிய மலைகளைக் கடந்து சென்றோம்.
சிற்றடி வைத்து நடக்கும் தோழியே!
சென்றவிடத்து
வேறு எதையும் நினைக்கவில்லை.
உள்ளத்தில் இருந்தது,
கடந்து சென்ற காட்டுப்பாதையில் மலர்ந்த
வளைந்தகிளை வெட்சியின்
முறுக்கவிழ்ந்த பூக்களால் மணக்கும்,
மைநிறக் கூந்தல் மடந்தையின்
காதல் மட்டுமே.

No comments:

Post a Comment