பாலை - தலைவி கூற்று
வெந்திறல் கடு வளி பொங்கர்ப் போந்தென
நெற்று விளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும்
மலையுடை அருஞ் சுரம் என்ப நம்
முலையிடை முனிநர் சென்ற ஆறே
-ஒளவையார்
திறல் - வலிமை. வளி - காற்று. பொங்கர் - மரக்கிளை. போந்தென
- வீசுவதால். நெற்று - உலர்ந்த காய். உழிஞ்சில் - வாகை மரம். ஆர்த்தல் - ஒலி எழுப்புதல்.
சுரம் - பாலை நிலம். முனிதல் - வெறுத்தல். ஆறு - வழி.
தலைவன் பொருள் தேடிப் போயிருக்க, அவனது பிரிவைத் தாங்க மாட்டாத
தலைவிக்கு, தோழி ஆறுதல் கூறிய போது, அவன் கடந்து சென்ற வழியின் கொடுமையை எண்ணி, தலைவி
சொன்னது.
வலிமையான வெப்பக்காற்று
கிளைகளின் மீது வீசுவதால்,
வாகை மரத்தின் வற்றிய காய்கள்
படபடவென ஒலிக்கும்,
மலைகள் சூழ்ந்த
பாலை நிலப் பாதை என்பர்.
நம் முலைகளுக்கிடையே துயில்வதை வெறுத்துப்
பிரிந்தவர் சென்ற வழி.

No comments:
Post a Comment