Friday, May 12, 2023

குறுந்தொகை 129 - கதுப்பயல் விளங்கும் சிறுநுதல்

குறிஞ்சி - தலைவன் கூற்று

எலுவ சிறாஅர் ஏமுறு நண்ப
புலவர் தோழ கேளாய் அத்தை
மாக்கடல் நடுவண் எண்ணாள் பக்கத்துப்
பசுவெண் திங்கள் தோன்றி யாங்குக்
கதுப்பு அயல் விளங்கும் சிறுநுதல்
புதுக்கோள் யானையின் பிணித்தற்றால் எம்மே.

-கோப்பெருஞ்சோழன்

எலுவன் - தோழன். சிறாஅர் - இளைஞர். ஏமம் - பாதுகாவல். அத்தை - அசைச்சொல். மா - கருமை. எண்ணாள் பக்கம் – எட்டாம் பிறை. பசுமை  - இளமை. கதுப்பு - கூந்தல். நுதல் - நெற்றி.

தலைவியை நினைந்து மயங்கிய சிந்தனையில் இருந்த தலைவனிடம், அதற்கான காரணத்தைக் கேட்ட தோழனுக்கு, தலைவன் சொன்னது.

இளைஞர்களுக்கு ஆதரவு நல்கும் நண்பனே!
புலவர்கள் தோழனே! கேளாய்.
கரிய கடல் நடுவே இளவெண் எட்டாம் பிறை
தோன்றியதைப் போல
அவள் கூந்தலிடையே விளங்கும் பிறை நெற்றி,
புதிதாய் பிடிபட்ட காட்டுயானையைப் போல
என்னைக் கட்டிப் போட்டது.

உவமை - கூந்தலுக்கு கடலும், நெற்றிக்கு பிறையும் உவமை. எண்ணாள் - எட்டாம் நாள் பிறை. அஷ்டமி.

No comments:

Post a Comment