பாலை - தலைவன் கூற்று
மாரிப் பித்திகத்து நீர்வார் கொழு முகை
இரும் பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து
பெரும் பெயல் விடியல் விரித்து விட்டன்ன
நறுந் தண்ணியளே நன் மா மேனி
புனற் புணையன்ன சாயிறைப் பணைத்தோள்
மணத்தலும் தணத்தலும் இலமே
பிரியின் வாழ்தல் அதனினும் இலமே.
-சிறைக்குடி ஆந்தையார்
மாரி - மழை. பித்திகம் - பிச்சிப்பூ. முகை - மொட்டு. இரு – பெரிய. பனம் - பனை. பெயல் - மழை. நறுமை - மணம். தண் - குளிர்ச்சி. மா - மாமை நிறம். புனல் – வெள்ளம். புணை - தெப்பம். சாய்தல் - மெலிதல். இறை - மணிக்கட்டு. பணை - மூங்கில். மணத்தல் - தழுவுதல்.. தணத்தல் - பிரிதல்.
பொருள் தேடிச் செல்லத் துணிந்த நெஞ்சிற்கு, தலைவியைப் பிரிவதை எண்ணி, தலைவன் சொன்னது.
மழையில் தழைத்த பிச்சியின்
நீர் சொட்டும் அரும்புகளை,
பெரும்பசும் பனையோலைக் குடையில்
பொதிந்து வைத்து,
மழை தூறும் விடியலில்
இரைத்து விட்டதைப் போன்று
நறு மணம் கொண்டவள்.
குளிர்ச்சியானவள்.
மாமை நிறத்தினள்.
காதல் வெள்ளத்தைக் கடக்க உதவும் தெப்பம்.
மெல்லிய கைகள்.
மூங்கில் தோள்கள்.
அணைத்தல், பின்னர் பிரிதல் என்பது இயலாது.
பிரிந்த பின் உயிர் வாழ்தல்
அதனினும் இயலாதது.
Wednesday, May 24, 2023
குறுந்தொகை 168 - மணத்தலும் தணத்தலும் இலமே
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment