மருதம் - தோழி கூற்று
அயிரை பரந்த அம்தண் பழனத்து
ஏந்து எழில் மலர தூம்புடைத் திரள்கால்
ஆம்பல் குறுநர் நீர்வேட்டாங்கு இவள்
இடைமுலைக் கிடந்தும் நடுங்கலானீர்
தொழுது காண் பிறையின் தோன்றி யாம் நுமக்கு
அரியம் ஆகிய காலைப்
பெரிய நோன்றனிர் நோகோ யானே.
-நெடும்பல்லியத்தையார்.
அயிரை - ஒருவகை மீன். பரந்த - மிகுந்த. அம் - அழகிய. தண் - குளிர்ச்சி. பழனம் - நீர்நிலை. ஏந்து - உயர்ந்த. தூம்பு - துளை. திரள்கால் - திரண்ட தண்டு. ஆம்பல் – அல்லி. குறுநர் - பறிப்போர். நோன்றனிர் - வருந்தினீர்.
தலைவன்-தலைவி காதலித்துத் திருமணம் செய்த பிறகு, அவர்களைக் காண வந்த தோழி, தலைவனிடம் சொன்னது.
அயிரை மீன்கள் நிறைந்த அழகிய குளத்தில்
நீருக்கு மேலே உயரும் பூக்களும்
துளையுடைய தண்டும் கொண்ட அல்லிச் செடி.
அதன் மலர்களைப் பறிப்பவர்
(நீருக்குள்ளேயே இருந்தும்)
தாகம் அடைந்ததைப் போல,
(திருமணம் முடிந்து சேர்ந்து வாழும் இக்காலத்தில்)
இவள் முலைகளுக்கு நடுவிலேயே கிடந்தும்
காதல் வேட்கையால் நடுங்குகிறீர்.
(திருமணத்திற்கு முன்பு)
மக்கள் தொழும் மூன்றாம் பிறையைப் போன்று
நாங்கள் சந்திக்க அரிதாக இருந்த போது
துன்பத்தை எப்படிப் பொறுத்தீர்?
அதை எண்ணி வருந்துகிறேன்.
தொழுது காண் பிறை - காண்பதற்கு அரிய மூன்றாம் பிறை. மக்கள் இப்பிறையைத் தொழுதனர்.
Wednesday, May 24, 2023
குறுந்தொகை 178 - தொழுது காண் பிறை
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment