Tuesday, May 30, 2023

குறுந்தொகை 234 - பெரும்புலர் விடியலும் மாலை

முல்லை - தலைவி கூற்று

சுடர் செல் வானம் சேப்பப் படர் கூர்ந்து
எல் அறு பொழுதின் முல்லை மலரும்
மாலை என்மனார் மயங்கியோரே
குடுமிக் கோழி நெடு நகர் இயம்பும்
பெரும் புலர் விடியலும் மாலை
பகலும் மாலை துணையிலோர்க்கே.

-மிளைப் பெருங் கந்தனார்

சுடர் - கதிரவன். சேப்ப - சிவப்ப. படர் - துன்பம். எல் - ஒளி. குடுமி - கொண்டை.

தலைவனைப் பிரிந்திருந்த தலைவி வருந்திச் சொன்னது.

கதிரவன் மறைய
வானம் சிவக்க
துயரம் மிகுந்து
ஒளி மங்கி
முல்லை மலரும் பொழுதை
மாலை என்பர் அறிவு மயங்கியோர்.
கொண்டைக் கோழி நெடிய நகரத்தில் கூவுகின்ற
பேரிருள் விலகும்
விடியலும் மாலை.
பகலும் மாலை.
துணைவரைப் பிரிந்தவர்க்கு.

No comments:

Post a Comment