Wednesday, May 10, 2023

குறுந்தொகை 115 - நின் அலது இலளே

குறிஞ்சி - தோழி கூற்று

பெரு நன்று ஆற்றின் பேணாரும் உளரே
ஒருநன்று உடையள் ஆயினும் புரி மாண்டு
புலவி தீர அளிமதி இலை கவர்பு
ஆடு அமை ஒழுகிய தண் நறுஞ் சாரல்
மென்னடை மரையா துஞ்சும்
நன்மலை நாட நின் அலது இலளே.

-கபிலர்

நன்று - நன்மை. பேணுதல் - போற்றுதல். புரி - விருப்பம். மாண் - மாட்சிமை. புலவி - ஊடல். அளி - அருள். கவர்பு - கவர்ந்து. ஆடுதல் - அசைதல். அமை - மூங்கில். ஒழுகுதல் - நீளுதல். மரையா - மான். துஞ்சும் - தூங்கும்.

திருமணத்திற்கு பெற்றோர் ஒப்பாததால், தலைவனும், தலைவியும் உடன்போகத் தயாரானபோது,  தலைவனுக்குத் தோழி அறிவுறுத்தியது.

பெரும் நன்மைகள் செய்தோரை
போற்றாதார் யாரும் உளரோ!
ஒரு நன்மை உடையவள் ஆயினும்,
இவள் மீது விருப்பம் கொள்.
மாட்சிமையோடு, வெறுப்பின்றி அருள் செய்.
இலைகளைக் கவர்ந்து உண்டு
அசையும் மூங்கில்கள் நெடிது வளர்ந்த
குளிர்ந்த, நறுமணம் வீசும் மலைச் சாரலில்
மென்நடை மான்கள் தூங்குகின்ற
மலை நாட்டுத் தலைவனே!
நின்னையன்றி
வேறு துணை இல்லாதவள்.

No comments:

Post a Comment