Friday, May 26, 2023

குறுந்தொகை 198 - வருகுவள் யாயே

குறிஞ்சி - தோழி கூற்று

யாஅம் கொன்ற மரம் சுட்டு இயவில்
கரும்பு மருள் முதல பைந்தாள் செந்தினை
மடப் பிடித் தடக்கை அன்ன பால் வார்பு
கரிக் குறட்டு இறைஞ்சிய செறிகோள் பைங்குரல்
படுகிளி கடிகம் சேறும் அடுபோர்
எஃகு விளங்கு தடக்கை மலையன் கானத்து
ஆரம் நாறும் மார்பினை
வாரற்க தில்ல வருகுவள் யாயே.

-கபிலர்.

யா - யா மரம். கொன்ற - வெட்டிய. சுடுதல் - எரித்தல். இயவு - காடு. மருள் - போல. தாள் - அடிப்பாகம். தினை - foxtail millet. பிடி - பெண்யானை. கரிக்குறடு - கொல்லர் கரி எடுக்கப் பயன்படுத்தும் குறடு. இறைஞ்சிய - வளைந்த. செறிகொள் - முற்றிய. குரல் - தினைக்கதிர். கடிதல் - விரட்டுதல். ஆரம் - சந்தனம். யாய் - தாய்.

வழக்கமகச் சந்திக்கும் இடம் பாதுகாப்பற்றது என்றும், அதற்குப் பதிலாக, தோட்டத்தில் தலைவியை சந்திக்கலாம் என்றும், தலைவனுக்குத் தோழி சொன்னது.

யா மரங்களை வெட்டி எரித்த காட்டு நிலம்.
கரும்பு போனற அடிப்பாகம் கொண்ட சிவந்த தினைச்செடி..
யானைத் துதிக்கை போன்றும்
கரி வாரும் குறடு போன்றும் வளைந்த
பால் நிரம்பி முற்றிய பசுங்கதிர்கள்.
அவற்றைத் தின்ன வரும் இன்குரல் கிளிகளை விரட்ட
நாங்கள் தோட்டத்துக்குப் போகின்றோம்.
பகைவரைக் கொல்லும் வாளேந்திய
வலிமையான கைகளைப் பெற்ற
மலையனின் காட்டில் விளைந்த
சந்தனம் மணக்கும் மார்பினைக் கொண்டவனே!
இனி இங்கு வராதே!
வருவாள் தாய்.

மலையன் - கடையெழு வள்ளல்களில் ஒருவனாகிய மலையமான் திருமுடிக்காரி.

No comments:

Post a Comment