முல்லை - தலைவன் கூற்று
கவலை கெண்டிய அகல்வாய்ச் சிறு குழி
கொன்றை ஒள் வீ தாஅய் செல்வர்
பொன் பெய் பேழை மூய் திறந்தன்ன
கார் எதிர் புறவினதுவே உயர்ந்தோர்க்கு
நீரொடு சொரிந்த மிச்சில் யாவர்க்கும்
வரைகோள் அறியாச் சொன்றி
நிரை கோல் குறுந்தொடி தந்தை ஊரே.
-பேயனார்
கவலை - ஒரு கிழங்கு. கெண்டிய - தோண்டிய. கொன்றை - ஒரு மலர். ஒள் - ஒளி பொருந்திய. வீ - மலர். தாஅய் - பரவிய. பேழை - பெட்டி. மூய் - மூடி. கார் - கார் காலம் . புறவு - முல்லை நிலம். மிச்சில் - எஞ்சியது. வரைகோள் - எல்லை. சொன்றி - சோறு. நிரை - வரிசை. கோல் - திரண்ட. தொடி - வளையல்.
திருமணத்திற்காகப் பொருள் தேடிச் சென்ற தலைவன், பொருளோடு திரும்பும் போது, தலைவியின் ஊர் தென்பட்டதும், பாகனுக்குச் சுட்டிக் காட்டிச் சொன்னது.
கவலைக் கிழங்கைத் தோண்டி எடுத்ததால் உண்டான
அகன்ற வாயுடைய சிறு குழியில்
ஒளிரும் கொன்றை மலர்கள் உதிர்ந்து கிடக்கின்றன.
அது செல்வந்தரின் பொன் நகைப்பெட்டியை
மூடியினைத் திறந்து வைத்ததைப் போல் தோன்றுகிறது.
அத்தகு கார்கால முல்லை நிலத்திடையே உள்ளது.
உயர்ந்தோர்க்கு நீர்சொரிந்து
தானம் செய்தபின் எஞ்சியதையும்
யாவர்க்கும் கொடுக்க
அளவில்லாச் சோற்றையும் கொண்ட
வரிசையாக சிறுவளையல்கள் அணிந்த
அவளின் தந்தையின் ஊர்.
Tuesday, May 30, 2023
குறுந்தொகை 233 - வரைகோள் அறியாச் சொன்றி
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment