முல்லை - தலைவி கூற்று
மட்டம் பெய்த மணிக் கலத்தன்ன
இட்டு வாய்ச் சுனைய பகுவாய்த் தேரை
தட்டைப் பறையின் கறங்கு நாடன்
தொல்லைத் திங்கள் நெடு வெண்ணிலவின்
மணந்தனன் மன் எம் தோளே
இன்றும் முல்லை முகை நாறும்மே.
-அரிசில் கிழார்
மட்டம் - கள். கலம் - பாத்திரம். இட்டு - குறுகிய. சுனை - நீரூற்று. பகுவாய் - பிளந்த வாய். தட்டைப் பறை - கிளிவிரட்டப் பயன்படத்தப்படும் பறை. கறங்கும் - ஒலிக்கும். தொல்லை - முன்பொரு. மணத்தல் - தழுவுதல். முகை - மொட்டு.
கள் குடுவை போன்று
குறுகிய வாய்கொண்ட சுனையில்
பிளந்தவாய்த் தேரை
தட்டைப் பறை போல ஒலி எழுப்பும்
நாட்டைச் சேர்ந்த தலைவன்.
முன்பொரு நாள்
முழுவெண் நிலவொளியில்
என் தோள்களைத் தழுவினான்.
(அவன் அணிந்திருந்த மாலையின்)
முல்லைப்பூ இன்றும் மணக்கிறது.
Friday, May 26, 2023
குறுந்தொகை 193 - முல்லை முகை நாறும்மே
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment