Wednesday, May 24, 2023

குறுந்தொகை 155 - தேர் வருமென்னும் உரை வாராதே

 முல்லை - தலைவி கூற்று

முதைப் புனம் கொன்ற ஆர்கலி உழவர்
விதைக் குறுவட்டி போதொடு பொதுளப்
பொழுதோ தான் வந்தன்றே மெழுகு ஆன்று
ஊதுலைப் பெய்த பகுவாய்த் தெண்மணி
மரம் பயில் இறும்பின் ஆர்ப்பச் சுரன் இழிபு
மாலை நனி விருந்து அயர்மார்
தேர் வரும் என்னும் உரை வாராதே.

-உரோடகத்துக் கந்தரத்தனார்

முதை - முதிய. புனம் - வயல். கொன்ற - உழுத. ஆர்கலி - ஆரவாரம். வட்டி - கூடை. போது - அரும்பு. பொதுள - நிறைய. பகுவாய் - பிளந்த வாய். தெண்மணி - தெளிந்த ஓசையுடைய மணி. இறும்பு - காடு. ஆர்த்தல் - ஒலித்தல். சுரன் - பாலை நிலம். அயர்தல் - செய்தல்.

பொருள் தேடிச் சென்றிருந்த தலைவன், திரும்பி வருவதாகக் கூறிய கார் காலம் வந்தும், அவன் இன்னும் வராததை எண்ணி, தலைவி வருந்திச் சொன்னது.

பழைய வயலை உழுத ஆரவாரம் மிக்க உழவர்கள்
காலையில் விதைகள் கொண்டு சென்ற கூடையில்,
மலர்கள் நிறைத்து வீடு திரும்பும்
மாலைப் பொழுது வந்தது.
மெழுகினால் செய்த அச்சில்
உலையில் ஊதி வடித்த
பிளந்த வாயை உடைய மணி,
மரங்கள் நிறைந்த காட்டில்
தெள்ளென ஒலிக்க,
பாலை நிலப் பாதையைக் கடந்து
மாலையில் நாம் நல் விருந்து சமைக்கும் படி
தேர் வருகின்றது
என்னும் சேதி வரவில்லை.

No comments:

Post a Comment