Wednesday, May 24, 2023

குறுந்தொகை 169 - இறீஇயர் எம் உயிரே

மருதம் - தலைவி கூற்று

சுரஞ்செல் யானைக் கல் உறு கோட்டின்
தெற்றென இறீஇயரோ ஐய மற்றி யாம்
நும்மொடு நக்க வால்வெள் எயிறே
பாணர் பசுமீன் சொரிந்த மண்டைபோல
எமக்கும் பெரும் புலவு ஆகி
நும்மும் பெறேஎம் இறீஇயர் எம் உயிரே.

-வெள்ளிவீதியார்

தான் பரத்தையிடம் செல்லவில்லை என்று கூறி, தன்னை ஏற்கும் படி தலைவன் வேண்டியபோது, அதனை ஒப்பாமல், தன் உயிர் போவதே நல்லது என்று, கோபத்தில் தலைவி கூறியது.

சுரம் - பாலை நிலம். கல் - பாறை. கோடு - தந்தம். தெற்றென - விரைவாக. நகுதல் - சிரித்தல். எயிறு - பல். மண்டை - பாத்திரம். புலவு - புலால் நாற்றம், வெறுப்பு.

பாலை நிலத்துச் செல்லும் யானையின் தந்தம்
பாறையில் மோதியது போல,
பட்டென உடையட்டும், தலைவனே!
உம்மோடு சிரித்துப் பேசிய
எம் வெண் பற்கள்.
பாணர்கள் மீன் வைத்திருந்த பாத்திரம்
(புலால் நாற்றத்தால் வேறெதற்கும் பயன்படாமல் போவது)
போல,
எமக்கும் பெரும் வெறுப்பினைத் தந்து
உம்மையும் யாம் பெறாமல்
அழிந்து போகட்டும்
எம் உயிர்.

No comments:

Post a Comment