நெய்தல் - தலைவி கூற்று
தா அம் சிறை நொப்பறை வாவல்
பழுமரம் படரும் பையுள் மாலை
எமியம் ஆக ஈங்குத் துறந்தோர்
தமியர் ஆக இனியர் கொல்லோ?
ஏழூர்ப் பொதுவினைக்கு ஓரூர் யாத்த
உலை வாங்கு மிதிதோல் போலத்
தலைவரம்பு அறியாது வருந்தும் என் நெஞ்சே.
-கச்சிப்பேட்டு நன்னாகையார்.
தா - வலிமை. அம் சிறை - அழகிய சிறகு. நொய்மை - மென்மை. பறை - பறத்தல். வாவல் - வௌவால். பையுள் - துன்பம். எமி - தனிமை. தமியர் - தனியர். வரம்பு - எல்லை.
திருமணத்திற்காகப் பொருள் தேடிச் சென்ற தலைவனின் பிரிவால் வருந்திய தலைவி, அவன் தனிமையில் எப்படி இருக்கிறானோ, என்று கவலைப் பட்டுச் சொன்னது.
வலிமையான அழகிய சிறகுகள் கொண்டு
மென்மையாய்ப் பறக்கும் வௌவால்கள்
பழுத்த மரங்களுக்குத் திரும்பும்
துன்பமான மாலைப் பொழுது.
எம்மைத் தனித்து விட்டுப் போனவர்
தம் தனிமையில் இன்பம் காண்பரோ?
ஏழு ஊர்களுக்குப் பொதுவாய்
ஓர் ஊரில் அமைக்கப்பட்ட
இரும்பு உலையின் மிதிபடும் துருத்தி போல
(எம் இருவரின் நிலையை எண்ணி)
வரம்பு அறியாது வருந்தும் என் நெஞ்சு.
மிதிதோல் - துருத்தி. இரும்பு உலையில் காற்றடிக்கப் பயன்படும் தோல்பை (bellow).
Wednesday, May 24, 2023
குறுந்தொகை 172 - உலை வாங்கு மிதி தோல்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment