Friday, May 12, 2023

குறுந்தொகை 137 - இரவலர் வாரா வைகல்

பாலை - தலைவன் கூற்று

மெல் இயல் அரிவை நின் நல் அகம் புலம்ப
நிற் துறந்து அமைகுவென் ஆயின் எற் துறந்து
இரவலர் வாரா வைகல்
பல ஆகுக யான் செலவுறு தகவே.

-பாலை பாடிய பெருங்கடுங்கோ

அகம் - நெஞ்சம். புலம்பு - துன்பம். இரவலர் - யாசிப்பவர். வைகல் – நாள். செலவு - பிரிவு. தகவு - தன்மை.

தலைவன் தன்னைத் திருமணம் செய்யாமல், பிரிந்து சென்று விடுவானோ என்று அஞ்சிய தலைவிக்கு, தலைவன் சொன்னது.

மெல்லியல்பு கொண்ட பெண்ணே!
உன் நல்ல உள்ளம் வருந்தும்படி
உன்னைத் துறந்து இருப்பேனாகில்,
என்னைத் துறந்து
இரவலர் வராத நாட்கள்
பல ஆகட்டும்
உன்னைப் பிரிந்த  
வினையின் விளைவால்.

இரவலர் – யாசிப்பவர் வாராது போனால், ஈகை (தானம்) என்ற அறச்செயலை செய்ய முடியாது போகும்.

No comments:

Post a Comment