பாலை - செவிலித்தாய் கூற்று
கழிய காவி குற்றும் கடல
வெண் தலைப் புணரி ஆடியும் நன்றே
பிரிவு இல் ஆயம் உரியது ஒன்று அயர
இவ் வழிப் படுதலும் ஒல்லாள் அவ்வழிப்
பரல் பாழ் படுப்பச் சென்றனள் மாதோ
செல் மழை தவழும் சென்னி
விண் உயர் பிறங்கல் விலங்கு மலை நாட்டே.
-மதுரை ஆசிரியன் கோடங்கொற்றனார்
கழி - உப்பங்கழி. காவி - செங்கழுநீர்ப் பூ. குற்றுதல் - பறித்தல். புணரி - அலை. ஆயம் - தோழியர்க் கூட்டம். அயர்தல் - விளையாடுதல். ஒல்லுதல் - உடன்படுதல். பரல் - கூழாங்கல். சென்னி - உச்சி. பிறங்கல் - பாறை. விலங்கு - அமைதல்.
திருமணத்திற்குப் பெற்றோர் சம்மதிக்காததால், தலைவனுடன் உடன்போய்விட்ட தலைவியை எண்ணி, செவிலித்தாய் வருந்திச் சொன்னது.
உப்பங்கழியில் செங்கழுநீர்ப் பூக்கள் பறித்தும்
கடலில் வெண்நுரை அலைகளில் குளித்தும்
விட்டுப்பிரியாத தோழிகளோடு
விளையாடிக் கொண்டும்
இங்கே இருக்க ஒப்பவில்லை.
கூழாங்கற்கள் கால்களை வருத்தும்
பாலை நிலத்து வழியே சென்று விட்டாள்.
மேகங்கள் தவழும் சிகரங்களும்
விண்தொடும் பாறைகளும் விளங்கும்
மலை நாட்டுக்கு.
Friday, May 12, 2023
குறுந்தொகை 144 - சென்றனள் மாதோ
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment