Tuesday, May 30, 2023

குறுந்தொகை 221 - முல்லையும் பூத்தன

முல்லை - தலைவி கூற்று

அவரோ வாரார் முல்லையும் பூத்தன
பறியுடைக் கையர் மறி இனத்து ஒழியப்
பாலொடு வந்து கூழொடு பெயரும்
ஆடுடை இடைமகன் சென்னிச்
சூடிய எல்லாம் சிறுபசு முகையே.

-உறையூர் முதுகொற்றனார்

பறி - பனையோலைக் குடை. மறி - ஆட்டுக்குட்டி.
ஒழிதல் - தங்குதல். கூழ் - உணவு. சென்னி - தலை.
பசுமுகை - புது மொட்டு.

தலைவன் கார் காலத்தே திரும்பி வருவதாகச் சொல்லிவிட்டுப் பொருள் தேடிச் சென்றிருக்க, கார் காலம் தொடங்கியும், அவன் வரத் தாமதம் ஆனபோது, தோழியிடம் தலைவி சொன்னது.

அவரோ இன்னும் வரவில்லை.
(கார் காலத்து மலரும்)
முல்லை மலர்களும் பூத்தன.
ஆட்டு மந்தையோடு இரவு தங்கும் பொருட்டு,
பால் ஊற்றி விட்டு
அதற்கு ஈடாக, உணவு பெற்றுக் கொண்டு செல்லும்
பனையோலைக் குடை ஏந்திய இடையர்கள்
தலையில் சூடியுள்ளவை எல்லாம்
சிறிய புது முல்லை மொட்டுக்கள். 

No comments:

Post a Comment