Friday, May 26, 2023

குறுந்தொகை 210 - காக்கையது பலி

முல்லை - தோழி கூற்று

திண் தேர் நள்ளி கானத்து அண்டர்
பல் ஆப் பயந்த நெய்யில் தொண்டி
முழுதுடன் விளைந்த வெண் நெல் வெஞ்சோறு
ஏழு கலத்து ஏந்தினும் சிறிது என் தோழி
பெருந்தோள் நெகிழ்த்த செல்லற்கு
விருந்து வரக் கரைந்த காக்கையது பலியே

-காக்கை பாடினியார் நச்செள்ளையார்

கானம் - காடு. அண்டர் - இடையர். ஆ - பசு. முழுதுடன் - முற்றிய. விருந்து - விருந்தினர். செல்லல் - துன்பம்.

பொருள் தேடித் போயிருந்த தலைவனின் பிரிவால் தலைவி வருந்தியிருந்த பொழுதில், காகம் கரைந்ததை, அவன் திரும்பி வருவதற்கான சகுனமாகக் கருதிய தோழி சொன்னது.

வலிமையான தேர்கொண்ட
நள்ளியின் காட்டில் மேயும்
இடையர்தம் பசுக்கள் பயந்த நெய்யில்,
தொண்டிப் பட்டினத்தில் முற்றி விளைந்த
வெண் நெல்லின் சுடு சோற்றினைக் கலந்து,
ஏழு கிண்ணங்களில் ஏந்தித் தந்தாலும்
குறைவுதான்.
என் தோழியின் பெருந்தோள்களை மெலியச் செய்த
பிரிவுத் துன்பத்தைப் போக்க வல்ல
விருந்தினர் (தலைவன்) வருமாறு கரைந்த
காகத்திற்குப் பலியாக.

நள்ளி - கடையெழு வள்ளல்களில் ஒருவனாகிய கோப்பெரு நள்ளி. தொண்டி - சேரர்களின் துறைமும். காக்கை - காகம் கரைந்தால் விருந்தினர் வருவார் என்பது தொல்காலம் தொட்டு இருந்து வரும் நம்பிக்கை.

No comments:

Post a Comment