பாலை - தலைவன் கூற்று
அஞ்சுவது அறியாது அமர்துணை தழீஇய
நெஞ்சு நப்பிரிந்தன்று ஆயினும் எஞ்சிய
கை பிணி நெகிழின் அஃதெவனோ நன்றும்
சேய அம்ம இருவாம் இடையே
மாக்கடல் திரையின் முழங்கி வலன் ஏர்பு
கோட்புலி வழங்கும் சோலை
எனைத்தென்று எண்ணுகோ முயக்கிடை மலைவே.
-அள்ளூர் நன்முல்லையார்.
அமர் - விருப்பம். தழீஇய - தழுவும் பொருட்டு. நப்பிரிந்தன்று - நம்மைப் பிரிந்தது. பிணி - அணைத்தல். சேய்மை - தொலைவு. அம்ம - அசைச் சொல். இருவாம் - இருவருக்கும். மா - கரிய. திரை - அலை. வலன் - வலிமை. ஏர்பு - எழுந்து. கோள் - கொலை. முயக்குதல் - தழுவுதல். மலைவு - தடைகள்.
தலைவியைப் பிரிந்து பொருள் தேடிச் சென்றிருந்த தலைவன், ஈட்டிய பொருளோடு திரும்பி வரும் போது, ஊர் செல்ல இன்னும் நெடுந்தொலைவு இருப்பதை எண்ணி, தேர்ப்பாகனுக்குச் சொன்னது.
அச்சம் என்பது அறியாமல்,
நம் விருப்பத்திற்குரிய தலைவியைத் தழுவ
நெஞ்சம் நம்மைப் பிரிந்து சென்றது.
எஞ்சியிருக்கும் கைககள் அணைக்க முடியாமல்
நெஞ்சம் மட்டும் தழுவிப் பயன் என்ன!
நெடுந்தொலைவு இருவருக்கும் இடையே.
கருங்கடல் அலை போல் முழங்கி
வலிமையோடு எழுந்து
கொல்லும் புலிகள் உலாவும் சோலைகள்.
எத்தனை என்று எண்ணுவேன்!
அவளை அணைப்பதற்கு
இடையே இருக்கும் தடைகள்.
Tuesday, May 30, 2023
குறுந்தொகை 237 - முயக்கிடை மலைவே
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment