Friday, May 12, 2023

குறுந்தொகை 145 - நெட்டிரா உடைத்தே

நெய்தல் - தலைவி கூற்று

உறைபதி அன்று இத்துறை கெழு சிறுகுடி
கானல் அம் சேர்ப்பன் கொடுமை எற்றி
ஆனாத் துயரமொடு வருந்திப் பானாள்
துஞ்சாது உறைநரொடு உசாவாத்
துயிற்கண் மாக்களொடு நெட்டிரா உடைத்தே.

-கொல்லன் அழிசியார்

கானல் - கடற்கரைச் சோலை. சேர்ப்பன் - நெய்தல் நிலத் தலைவன். எற்றுதல் - நினைத்தல். ஆனா - அடங்காத. பானாள் - நள்ளிரவு. துஞ்சுதல் - தூங்குதல். உசாவுதல் - வினவுதல். நெட்டிரா - நீண்ட இரவு.

தலைவன் பொருள் தேடிப் போயிருக்க, அவனது பிரிவை எண்ணி, தலைவி வருந்திச் சொன்னது.

வாழத் தகுதியற்றது
இந்தக் கடற்கரைச் சிற்றூர்.
சோலைகள் சூழ்ந்த நெய்தல் நிலத்துத் தலைவன் தந்த
பிரிவுத் துன்பத்தை எண்ணி,
அடங்காத துயரத்தோடு
நள்ளிரவில் துயிலாமல் இருப்பவரை,
விசாரித்து ஆறுதல் கூறாமல்
தூங்கிக் கொண்டிருக்கும் மக்களையும்,
நீண்ட இரவையும் உடையது.

No comments:

Post a Comment