Wednesday, May 10, 2023

குறுந்தொகை 116 - வளங்கெழு சோழர் உறந்தை

குறிஞ்சி - தலைவன் கூற்று

யான் நயந்து உறைவோள் தேம்பாய் கூந்தல்
வளங்கெழு சோழர் உறந்தைப் பெருந்துறை
நுண்மணல் அறல் வார்ந்தன்ன
நன்னெறி யவ்வே நறுந் தண்ணியவே.

-இளங்கீரனார்

தேம் - இனிய. பாய் - தவழும். துறை – நீர்த்துறை. அறல் - கருமணல். வாரல் - நீளுதல். நெறிப்பு - மணல் சுவடு. நறுமை - மணம். தண்மை – குளிர்ச்சி.

என்னால் விரும்பப்பட்டு, என்னுடன் பழகும்
இப்பெண்ணின் தவழும் கூந்தல்,
வளம்மிக்க சோழர்தம் உறந்தை நகரத்து
ஆற்றங்கரையின் நுண்ணிய கருமணலை
வார்த்ததைப் போன்று
அலையலையாய்ப் படர்ந்தது.
மணம் மிக்கது.
குளிர்ச்சியானது.

உறந்தை – உறையூர். சோழர் தலைநகர். ஆறு – காவிரி.

No comments:

Post a Comment