Wednesday, May 24, 2023

குறுந்தொகை 149 - காமம் நெரிதரக் கைந்நிலாவே

பாலை - தலைவி கூற்று

அளிதோ தானே நாணே நம்மொடு
நனி நீடு உழந்தன்று மன்னே இனியே
வான் பூங் கரும்பின் ஓங்கு மணற் சிறு சிறை
தீம்புனல் நெரிதர வீய்ந்து உக்கா அங்குத்
தாங்கும் அளவைத் தாங்கிக்
காம நெரிதரக் கைந்நில்லாவே.

-வெள்ளிவீதியார்

அளிது - இரங்கத்தக்கது. நாண் - நாணம். உழந்தன்று - வருந்தியது. வான் - வெண்மை. சிறை - பாத்தி. தீம்புனல் - வெள்ளம். வீய்ந்து - அழிந்து. உகுதல் - கரைதல்.

பெற்றோர் திருமணத்திற்குச் ஒப்புதல் தராததால், தலைவனுடன் உடன்போக தோழி அறிவுறுத்தியபோது, அதனை ஏற்கும் மனநிலையில் இருந்த தலைவி சொன்னது.

இரங்கத் தக்கது நாணம்.
நீண்ட காலம் நம்மோடு வருந்திக் கிடந்தது.
இனி,
வெண்ணிறப் பூக்கள் மலர்ந்த
கரும்பிற்கு இடப்பட்ட மண் பாத்தி
வெள்ளம் வந்து தாக்கும்போது
அழிந்து கரைவதைப் போல,
தாங்கும் வரைத் தாங்கிவிட்டு
காதல் நெருக்கும் போது
கைவிட்டு நீங்கும்.

No comments:

Post a Comment