குறிஞ்சி - தலைவி கூற்று
கௌவை அஞ்சின் காமம் எய்க்கும்
எள் அற விடினே உள்ளது நாணே
பெருங்களிறு வாங்க முரிந்து நிலம் படாஅ
நாருடை ஒசியல் அற்றே
கண்டிசின் தோழி அவர் உண்ட என் நலனே.
-ஆலத்தூர் கிழார்
கௌவை - பழிச்சொல். எய்த்தல் - குறைதல். எள் - இகழ்ச்சி. களிறு - யானை. ஒசியல் - ஒடிந்த கிளை.
திருமணம் செய்யாமல் தலைவன் காலம் கடத்தியபோது, தலைவி சொன்னது.
ஊராரின் பழிச்சொல்லுக்கு அஞ்சி
(அவனை நினையாமல் இருந்தால்)
காதல் குறையும்.
பழிச்சொல் முழுதும் அழியும்படி
காதலைக் கைவிட்டால்
மிஞ்சப் போவது நாணம் மட்டுமே.
யானை வளைத்ததால் முறிந்து,
(மரத்திலும் இல்லாமல்)
நிலத்திலும் விழாமல்,
நாருடன் தொங்கிக் கொண்டிருக்கும்
ஒடிந்த மரக்கிளை போன்று உள்ளது.
காண்பாய் தோழி!
அவர் துய்த்த
என் பெண்மை நலன்.
Wednesday, May 10, 2023
குறுந்தொகை 112 - நாருடை ஒசியல்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment