Friday, May 26, 2023

குறுந்தொகை 180 - ஒரு கழை நீடிய சுரன்

பாலை - தோழி கூற்று

பழூஉப் பல் அன்ன பரு உகிர்ப் பா அடி
இருங்களிற்று இன நிரை ஏந்தல் வரின் மாய்ந்து
அறை மடி கரும்பின் கண் இடை அன்ன
பைதல் ஒரு கழை நீடிய சுரன் இறந்து
எய்தினர் கொல்லோ பொருளே அல்குல்
அவ்வரி வாடத் துறந்தோர்
வன்பர் ஆகத் தாம் சென்ற நாட்டே.

-கச்சிப்பேட்டு நன்னாகையார்.

பழு - பேய். பரு - பருத்த. உகிர் - நகம். பா - பரந்த. இரு - பெரிய. களிறு - யானை. இனம் - கூட்டம். நிரை - வரிசை. ஏந்தல் - தலைவன். மாய்ந்து - அழிந்து. அறை - பாத்தி. கண் - கணு. பைதல் - துன்பம். கழை - மூங்கில். சுரன் – பாலைநிலத்துப் பாதை. இறத்தல் - கடத்தல். அல்குல் - இடை. வரி - தேமல். வன்பர் - வன்னெஞ்சர்.

பொருள் தேடிச் சென்ற தலைவனின் பிரிவால் வருந்தியிருந்த தலைவியிடம், தோழி சொன்னது.

பேய்ப்பல் போன்ற பெரிய நகங்களும்
பரந்த பாதங்களும் உடைய யானைகளின் கூட்டம்.
அக்கூட்டத்துத் தலைவன் மிதித்ததால்
பாத்தியில் முறிந்து வீழ்ந்த கரும்புகள்.
அவற்றின் கணுக்களுக்கு இடையில் இருக்கும்
கரும்புத் துண்டின் உயரம் உள்ள
ஒற்றை மூங்கில் குருத்து மட்டுமே வளர்ந்த
வறண்ட பாலை நிலப் பாதை.
அந்தக் கொடிய பாதையைக் கடந்து போனவர்
எய்தினாரோ? தாம் தேடிச் சென்ற செல்வம்.
இவளது இடையின் தேமல் வாடும் படி
பிரிந்த சென்ற வன்னெஞ்சர்.
தாம் சென்ற நாட்டில். 

No comments:

Post a Comment