மருதம் - தோழி கூற்று
பாசு அவல் இடித்த கருங் காழ் உலக்கை
ஆய் கதிர் நெல்லின் வரம்பு அணைத் துயிற்றி
ஒண் தொடி மகளிர் வண்டல் அயரும்
தொண்டி அன்ன என் நலம் தந்து
கொண்டனை சென்மோ மகிழ்ந நின் சூளே.
-குன்றியனார்.
பாசு - பசுமை. காழ் - வயிரம். ஆய் - அழகு. வரம்பு - வரப்பு. துயிற்றி - படுக்க வைத்து. ஒண் - ஒளிரும். தொடி - வளையல். வண்டல் - ஒரு வகை விளையாட்டு. அயர்தல் - விளையாடுதல். தொண்டி - சேரர் துறைமுகம். மகிழ்நன் - மருத நிலத் தலைவன். சூள் - சத்தியம்.
தலைவியைப் பிரிந்து பரத்தையிடம் சென்றிருந்த தலைவன், மீண்டும் தலைவியோடு சேர விரும்பி, "இனிப் பிரியேன்" எனச் சத்தியம் செய்து, சேர்த்து வைக்குமாறு வேண்டியபோது, தோழி சொன்னது.
பச்சை அவலை இடித்த
கரிய, வயிரம் பாய்ந்த உலக்கையை
நெல் வரப்பில் சாய்த்துவிட்டு
ஒளிரும் வளையல் அணிந்த மகளிர்
வண்டல் விளையாடும்
தொண்டிப் பட்டினம்.
அப்பட்டினம் போலச் சிறந்து இருந்த
தலைவியின் பெண்மை நலத்தைத்
திரும்பத் தந்துவிட்டு,
தூக்கிக் கொண்டு போ தலைவனே!
உன் சத்தியத்தை.
Tuesday, May 30, 2023
குறுந்தொகை 238 - கொண்டனை சென்மோ நின் சூளே
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment