நெய்தல் - தலைவன் கூற்று
குணக்கடல் திரையது பறை தபு நாரை
திண்தேர்ப் பொறையன் தொண்டி முன்துறை
அயிரை ஆர் இரைக்கு அணவந்தாங்குச்
சேயள் அரியோள் படர்தி
நோயை நெஞ்சே நோய்ப் பாலோயே.
-பரணர்
குணதிசை - கிழக்கு. திரை - அலை. பறை - சிறகு. தபு - இழந்த. பொறையன் - சேரன். அயிரை - ஒரு மீன். அணவந்தல் - தலை நிமிர்ந்து பார்த்தல். சேய் – தொலைவு. படர் – துன்பம்.
தான் விரும்பிய தலைவி, தனக்குக் கிடைக்க மாட்டாள் என்று எண்ணிய தலைவன் வருந்திச் சொன்னது.
கீழ்த்திசைக் கடற்கரையில்
சிறகொடிந்து கிடக்கும் நாரை,
வலிமையான தேர்கொண்ட சேரனுடைய
மேல்திசை தொண்டி கடற்கரையில் கிடைக்கும்
அயிரை மீனுக்கு ஆசைப்பட்டு
அண்ணாந்து பார்ப்பது போல,
நெடுந்தொலைவில் உள்ள
கிடைத்தற்கு அரியவளை நினைந்து
நோயுற்று வருந்துகிறாயே, நெஞ்சே!
தொண்டி - சேரர்களின் துறைமுகப் பட்டினம். தற்போதைய கேரளக் கடற்கரை.

No comments:
Post a Comment