குறிஞ்சி - தலைவன் கூற்று
பார்ப்பன மகனே பார்ப்பன மகனே
செம்பூ முருக்கின் நல்நார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ் கமண்டலத்துப்
படிவ உண்டிப் பார்ப்பன மகனே
எழுதாக் கற்பின் நின் சொலுள்ளும்
பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்
மருந்தும் உண்டோ மயலோ இதுவே
-பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்
படிவம் - நோன்பு. புணர்த்தல் – சேர்த்தல்.
தலைவியின் நினைவாகவே இருக்கும் தலைவனுக்கு, அறிவுரை கூறிய தோழனிடம், தலைவன் சொன்னது.
பார்ப்பன மகனே!
செந்நிறப் பூக்கள் கொண்ட புரச மரக்கிளையின்
நார் நீக்கிச் செய்த தண்டமும்
தாழ இருக்கும் கமண்டலமும் ஏந்தி
நோன்பு உணவு உண்ணும் பார்ப்பன மகனே!
எழுதப்படாத வேதங்களைக் கற்ற
நீ சொல்லும் சொற்களுள்
பிரிந்தவரைச் சேர்க்கும்
மருந்து ஏதும் உண்டோ? கூறு.
வேறு மயக்கும் பேச்சுகள் வேண்டாம்.
முருக்கு - புரசம்; பலாசம். வேதச் சடங்குகள் செய்வோர் புரசமரத் தண்டினை ஏந்தி இருப்பர். கற்பு - கல்வி. எழுதாக் கற்பு - எழுதி வைக்காமல், வாய்மொழியாகவே பரப்பப்பட்ட வேதங்கள்.
Wednesday, May 24, 2023
குறுந்தொகை 156 - எழுதாக் கற்பு
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment