Friday, May 12, 2023

குறுந்தொகை 131 - பேரமர்க் கண்ணி

பாலை - தலைவன் கூற்று

ஆடு அமை புரையும் வனப்பின் பணைத் தோள்
பேர் அமர்க் கண்ணி இருந்த ஊரே
நெடுஞ் சேண் ஆர் இடையதுவே நெஞ்சே
ஈரம் பட்ட செவ்விப் பைம் புனத்து
ஓர் ஏர் உழவன் போலப்
பெரு விதுப்பு உற்றன்றால் நோகோ யானே

-ஓரேருழுவனார்

ஆடுதல் – அசைதல். அமை - மூங்கில். பணை - பருத்த.  அமர் - போர். சேண் - தொலைவு. செவ்வி - தகுந்த காலம். புனம் - வயல். விதுப்பு - விரைவு.

பொருள் தேடிச் சென்ற தலைவன், திரும்பி வரும் வழியில், தலைவியின் ஊர் இன்னும் நெடுந்தொலைவு இருப்பதை எண்ணி, தன் நெஞ்சுக்குச் சொன்னது.

அசையும் மூங்கில் போன்ற அழகிய தோள்களும்
(பார்ப்போர் நெஞ்சோடு)
போர் செய்யும் கண்களும் கொண்டவள்.
அவள் இருக்கும் ஊர் இன்னும் நெடுந்தொலைவு.
நெஞ்சே!
மழையில் நனைந்து,
உழுவதற்குத் தயாராய் உள்ள பச்சை வயலை
(காலம் தப்பும் முன், உழுது முடிக்க அவசரம் காட்டும்)
ஒற்றை ஏர் கொண்ட உழவன் போல,
ஊர் சென்றுசேர அவசரப் படுகிறாய்!
அதை எண்ணி வருந்துகிறேன்.

ஓர் ஏர்  உழவன் - பல ஏர்களும், பணியாளர்களும் இல்லாத, ஒற்றை ஏர் கொண்ட தனி உழவன், மழையில் நனைந்த வயலை, காலம் தப்பும் முன், உழுது முடிக்கக் காட்டும் அவசரம் இங்கு உவமை.

No comments:

Post a Comment