Wednesday, May 24, 2023

குறுந்தொகை 174 - அருளே மன்ற ஆரும் இல்லதுவே

பாலை - தலைவி கூற்று

பெயல் மழை துறந்த புலம்பு உறு கடத்துக்
கவை முள் கள்ளிக்காய் விடு கடு நொடி
துதை மென் தூவித் துணைப் புறவு இரிக்கும்
அத்தம் அரிய என்னார் நம் துறந்து
பொருள் வயின் பிரிவாராயின் இனி இவ்வுலகத்துப்
பொருளே மன்ற பொருளே
அருளே மன்ற ஆரும் இல்லதுவே.

-வெண்பூதியார்

புலம்பு - தனிமை. கடம் - காடு. கவை - பிளந்த. நொடி - வெடிக்கும் ஒலி. துதை - அடர்ந்த. தூவி - சிறகு. புறவு - புறா. இரித்தல் - ஓடச் செய்தல். அத்தம் - பாலைநிலம். மன்ற - நிச்சயமாக. ஆரும் - யாரும்.

தலைவன் பொருள் தேடிப் பிரியப் போகின்றான் என்பதை தோழி மூலம் அறிந்த தலைவி வருந்திச் சொன்னது.

மழையற்ற, தனிமையான காட்டு வழி.
முள் மூடிய கள்ளிக்காய் பிளந்து வெடிக்கும் ஒலி
அடர்ந்த, மென்மையான சிறகுகள் கொண்ட
ஜோடிப் புறாக்களை வெருண்டு பறக்கச் செய்யும்
பாலை நிலம்.
அது கடத்தற்கரியது என்பதைக் கூட கருதாமல்,
நம்மைத் துறந்து
பொருள் தேடிப் பிரிவாராயின்,
இனி இவ்வுலகத்தே
பொருள் மட்டுமே முக்கியம் என்றாகும்.
அன்பினைப் போற்றுவோர்  
யாரும் இல்லை என்றாகிவிடும்.

No comments:

Post a Comment