Thursday, June 1, 2023

குறுந்தொகை 395 - அரவு நுங்கு மதி

பாலை - தலைவி கூற்று

நெஞ்சே நிறை ஒல்லாதே அவரே
அன்பு இன்மையின் அருள் பொருள் என்னார்
வன்கண் கொண்டு வலித்து வல்லுநரே
அரவு நுங்கு மதியினுக்கு இவணோர் போலக்
களையார் ஆயினுங் கண் இனிது படீஇயர்
அஞ்சல் என்மரும் இல்லை அந்தில்
அளிதோ தானே நாணே
ஆங்கு அவர் வதிவயின் நீங்கப் படினே.

-புலவர் பெயர் தெரியவில்லை.

நிறை - நிலையாக நிற்றல். வன்கண் - கொடுமை. வலித்து - துன்புறுத்தி. அரவு - பாம்பு. நுங்கு - விழுங்கும். மதி - நிலவு. இவண் - இவ்வுலகம். அந்தில் - அசைச் சொல். அளிது - இரங்கத் தக்கது. வதிவயின் - வசிப்பிடம்.

தலைவன் பொருள் தேடிப் போயிருக்க, அவன் பிரிவைத் தாங்க முடியாத தலைவி சொன்னது.

நெஞ்சம் ஒரு நிலையில் இல்லை.
அவரோ, அன்பு இல்லாததால்
அருளே பொருள் என்று நினையார்.
இரக்கமின்றி வருத்துவதில் வல்லவர் ஆனார்.
பாம்பு விழுங்கும்போது
நிலவினைக் காப்பாற்றாத இவ்வுலகத்தவர் போல
என் துன்பத்தைக் களையாமல்
இனிது உறங்குகின்றனர் இவ்வூர் மக்கள்.
அஞ்சாதே என்பவரும் இல்லை.
இரங்கத் தக்கது நாணம்.
அவர் இருக்கும் இடத்திற்கு
நாம் நீங்கிச் சென்றால்.

No comments:

Post a Comment