குறிஞ்சி - தோழி கூற்று
மண்ணிய சென்ற ஒள் நுதல் அரிவை
புனல் தரு பசுங் காய் தின்றதன் தப்பற்கு
ஒன்பதிற்று ஒன்பது களிற்றொடு அவள் நிறை
பொன் செய் பாவை கொடுப்பவும் கொள்ளான்
பெண் கொலை புரிந்த நன்னன் போல
வரையா நிரையத்துச் செலீஇயரோ அன்னை
ஒரு நாள் நகை முக விருந்தினன் வந்தெனப்
பகை முக ஊரின் துஞ்சலோ இலளே.
-பரணர்
மண்ணுதல் - நீராடல். நுதல் - நெற்றி. புனல் - வெள்ளம். களிறு - யானை. நிறை – எடை. பாவை - பதுமை. வரையா - மீளமுடியாத. நிரையம் - நரகம். பகைமுகம் – போர் முனை. துஞ்சுதல் - தூங்குதல்.
தலைவனிடமிருந்து தலைவியைப் பிரித்து வைத்த தாயைக் குறித்து, கோபத்தோடு தோழி கூறியது.
நீராடச் சென்ற, ஒளிரும் நெற்றிப் பெண்ணொருத்தி
வெள்ளத்தில் மிதந்து வந்த
(காவல் மரத்தின்) பசுங்காயைத் தின்ற குற்றத்திற்காக
எண்பத்தொன்று யானைகளோடு
எடைக்கு எடை பொன்னாலான பதுமையை
அவள் தந்தை கொடுத்த போதும்
அவற்றை ஏற்காமல்
பெண்கொலை புரிந்த நன்னன் போல
மீளமுடியாத நரகத்திற்குச் செல்லட்டும் அன்னை.
ஒரே ஒரு நாள், மலர்ந்த முகத்தோடு
விருந்தினன் (வேடத்தில் தலைவன்) வந்தான் என்பதற்காக
போர் நிகழும் ஊரின் மக்கள் போலத்
துயிலாமல் இருக்கிறாள்.
நன்னன் - சங்ககாலத்து மன்னர் காவல் மரங்கள் வளர்த்தனர். அவ்வாறு நன்னன் மாமரம் ஒன்று வளர்த்தான். அதன் கனியைப் புசித்த பெண்ணிற்கு மரணதண்டனை விதித்து, பெண்கொலை புரிந்தவன் என்ற இகழிச்சிக்கு ஆளானான்.
Thursday, June 1, 2023
குறுந்தொகை 292 - வரையா நிரையம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment