Thursday, June 1, 2023

குறுந்தொகை 362 - ஒண்தார் அகலம் உண்ணுமோ பலி

குறிஞ்சி - தோழி கூற்று

முருகு அயர்ந்து வந்த முது வாய் வேல
சினவல் ஓம்புமதி வினவுவது உடையேன்
பல் வேறு உருவில் சில் அவிழ் மடையொடு
சிறு மறி கொன்று இவள் நறு நுதல் நீவி
வணங்கினை கொடுத்தி ஆயின் அணங்கிய
விண்தோய் மாமலைச் சிலம்பன்
ஒண்தார் அகலமும் உண்ணுமோ பலியே.

-வேம்பற்றூர்க் கண்ணன் கூத்தனார்.

முருகு - முருகன். அயர்தல் - வெறியாட்டு வழிபாடு. முதுவாய் - அறிவுமிக்க. வேலன் - வேலன் வேடமிட்ட பூசாரி. ஓம்புமதி - தவிர்ப்பாய். அவிழ் - சோறு. மடை - படையல். மறி - ஆட்டுக்குட்டி. நறு - மணமுள்ள. நுதல் - நெற்றி. அணங்கிய - வருத்திய. சிலம்பன் - மலைநாட்டுத் தலைவன். ஒள் - ஒளிரும். தார் - மாலை. அகலம் - மார்பு.

தலைவன் உடனான காதலால் தலைவி உடல் மெலிய, அது ஏதோ ஒரு நோயினால் ஏற்பட்டது என்று எண்ணி, அதற்குப் பரிகாரமாக, தாய் ஏற்பாடு செய்த முருகன் வெறியாட்டு நிகழ்வில், தலைவியின் காதலை யாவரும் அறியும் வண்ணம் வெளிப்படுத்தி, தோழி கூறியது.

முருகனுக்கு வெறியாட்டு வழிபாடு செய்யும்
அறிவு மிகுந்த வேலனே!
சினம் தவிர்ப்பாய்.
உன்னிடம் ஒரு கேள்வி.
பல நிற சோற்றுப் படையலோடு
சிறிய ஆட்டுக்குட்டியைக் கொன்று
இவள் மணம் கமழ் நெற்றியை நீவி
கடவுளை வணங்கி பலி கொடுக்கிறாய்.
இவளை வருத்திய
விண் தொடும் சிகரங்கள் நிறைந்த
மலை நாட்டுத் தலைவனின்
ஒளிரும் மாலை அணிந்த மார்பும்
உண்ணுமோ உன் பலியை.

No comments:

Post a Comment