பாலை - செவிலித்தாய் கூற்று
நிழல் ஆன்று அவிந்த நீர் இல் ஆர் இடைக்
கழலோன் காப்பக் கடுகுபு போகி
அறுசுனை மருங்கின் மறுகுபு வெந்த
வெவ் வெங் கலுழி தவ்வெனக் குடிக்கிய
யாங்கு வல்லுநள்கொல் தானே ஏந்திய
செம் பொற் புனை கலத்து அம் பொரிக் கலந்த
பாலும் பல என உண்ணாள்
கோல் அமை குறுந் தொடித் தளிர் அன்னோளே.
-கயமனார்.
ஆன்று - அடங்கி. அவிந்த - மறைந்த. ஆர் இடை - அரிய வழி. கடுகுபு - வேகமாக. அறுசுனை - நீரற்ற சுனை. மருங்கு - பக்கம். மறுகுபு - உலர்ந்த. வெவ்வெம் - சூடான. கலுழி - கலங்கிய நீர். தவ் - ஓசைக்குறிப்பு. கோல் - திரண்ட. தொடி - வளையல்.
பெற்றோர் திருமணத்திற்கு ஒப்பாததால், தலைவனுடன் தலைவி உடன்போய்விட, அவளை நினைந்து செவிலித்தாய் வருந்திச் சொன்னது.
நிழலற்ற, நீர் வறண்ட பாலை நிலப் பாதையில்
கழலணிந்த தலைவன் காக்க
விரைந்து சென்று விட்டாள்.
நீரில்லாச் சுனையின் அருகில்
உலர்ந்து, வெந்துபோன கலங்கல் நீரை
'தவ் தவ்' என்று ஒலியெழக் குடிக்கும்
மனவலிமை எப்படிப் பெற்றாள்?
தான் ஏந்திய பொற்கிண்ணத்தில்
பொரி கலந்த பாலைக்கூட
'போதும், அதிகம்' என்று சொல்லிய,
குறு வளையல்கள் அணிந்த
தளிர் போன்றவள்.
Thursday, June 1, 2023
குறுந்தொகை 356 - தளிர் அன்னோளே
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment