Thursday, June 1, 2023

குறுந்தொகை 323 - படுமலை பண்ணிய எழால்

முல்லை - தலைவன் கூற்று

எல்லாம் எவனோ பதடி வைகல்
பாணர் படுமலை பண்ணிய எழாலின்
வானத்து எழும் சுவர் நல் இசை வீழப்
பெய்த புலத்துப் பூத்த முல்லைப்
பசு முகைத் தாது நாறும் நறு நுதல்
அரிவை தோள் இணைத் துஞ்சிக்
கழிந்த நாள் இவண் வாழு நாளே.

-பதடி வைகலார்

பதடி - பதர். வைகல் - நாள். படுமலை - ஒருவகைப் பண். எழால் - யாழ். சுவர் - உச்ச ஒலி. வீழ - போல. புலம் - தோட்டம். முகை - மொட்டு. நுதல் - நெற்றி. துஞ்சுதல் - தூங்குதல். இவண் - இங்கு.

மற்றவை எல்லாம்
பதர் போன்று பயனற்ற நாட்களே.
பாணர்கள் படுமலைப் பண்ணில் யாழ் மீட்டும்போது
வானத்தில் எழும் இசையைப் போல
உச்ச ஒலியுடன் மழை பொழியும்
தோட்டத்தில் பூத்த முல்லைப் பூப்போன்று
மணக்கும் நெற்றியையுடைய
அவளின் தோள்களில் உறங்கிக் கழித்த நாட்களே
இவ்வுலகில் வாழும் நாட்கள்.

No comments:

Post a Comment