Thursday, June 1, 2023

குறுந்தொகை 307 - இன்னம் பிறந்தன்று பிறையே

பாலை - தலைவி கூற்று

வளை உடைத்து அனையதாகிப் பலர் தொழச்
செவ்வாய் வானத்து ஐ எனத் தோன்றி
இன்னம் பிறந்தன்று பிறையே அன்னோ
மறந்தனர் கொல்லோ தாமே களிறு தன்
உயங்கு நடை மடப்பிடி வருத்தம் நோனாது
நிலை உயர் யாஅந் தொலையக் குத்தி
வெண் நார் கொண்டு கைசுவைத்து அண்ணாந்து
அழுங்கல் நெஞ்சமொடு முழங்கும்
அத்த நீள் இடை அழப் பிரிந்தோரே.

-கடம்பனூர்ச் சாண்டிலியனார்

ஐ - விரைந்து. களிறு - ஆண் யானை. உயங்கு - சோர்வு. பிடி - பெண் யானை. நோனாது - தாங்காது. யா - யா மரம். நார் - மரப்பட்டை. கை - துதிக்கை. அழுங்கல் - துயரம். அத்தம் - பாலை நிலம்.

பொருள்தேடிச் சென்ற தலைவன், திரும்பி வருவதாக குறித்துச் சென்ற காலம் தாண்டி, மேலும் ஒரு மாதம் கடந்த நிலையில் தலைவி சொன்னது.

உடைந்த வளையல் போல விளங்கி
பலரும் கை தொழ
சிவந்த வானத்தில் விரைந்தெழுந்து பிறந்து விட்டது
இன்னொரு மூன்றாம் பிறை.
மறந்து விட்டாரோ?
ஆண் யானை,
சோர்ந்து நடக்கும் பெண் யானையின்
தாகத்தைக் கண்டு பொறுக்க முடியாமல்,
உயர்ந்த யாமரத்தை தந்தத்தால் குத்தி, பட்டையை உரித்து
தன் வெறுங் கையையே சுவைத்து
அண்ணாந்து பார்த்து, துயர நெஞ்சோடு பிளிறும்
வறண்ட பாலை நிலத்து நீண்ட பாதையில்
என்னை அழவைத்து விட்டுப் பிரிந்து போனவர்.

பிறை - மூன்றாம் பிறை. சங்ககால மக்கள் மூன்றாம் பிறையைக் கொண்டு மாதங்களைக் கணக்கிட்டனர். மூன்றாம் பிறையைத் தொழும் வழக்கமும் இருந்தது.

No comments:

Post a Comment