பாலை - தோழி கூற்று
ஊஉர் அலர் எழச் சேரி கல்லென
ஆனாது அலைக்கும் அறன் இல் அன்னை
தானே இருக்க தன் மனையானே
நெல்லி தின்ற முள் எயிறு தயங்க
உணல் ஆய்ந்திசினால் அவரொடு சேய் நாட்டு
விண் தொட நிவந்த விலங்கு மலைக் கவாஅற்
கரும்பு நடு பாத்தி அன்ன
பெருங் களிற்று அடி வழி நிலைஇய நீரே.
-பாலை பாடிய பெருங்கடுங்கோ.
அலர் - பழிச்சொல். ஆனாது - இடைவிடாது. அலைக்கும் - துன்புறுத்தும். முள் - கூரிய. எயிறு - பல். தயங்க - விளங்க. ஆய்ந்திசின் - ஆராய்ந்தேன். சேய் - தொலைவு. நிவந்த - உயர்ந்த. விலங்கு - குறுக்கிடும். கவான் - மலை. களிறு - யானை.
திருமணத்திற்குப் பெற்றோர் ஒப்பாததால் தலைவனுடன் உடன்போகுமாறு, தலைவிக்கு தோழி அறிவுறுத்தியது.
ஊரெல்லாம் பழிச்சொல் உண்டாக
சேரி கல்லென்று ஆரவாரிக்க,
இடைவிடாது துன்புறுத்ததும் அறமற்ற அன்னை
தன் மனையில் தனித்திருக்கட்டும்.
நெல்லிக்காயைத் தின்ற கூரிய பற்கள் விளங்க,
நீ குடிப்பதாய் நினைத்துப் பார்க்கிறேன்.
தொலைதூர நாட்டில்
விண்தொடும் மலை மீதமைந்த பாலை நிலப் பாதையில்
கரும்பு நடத் தோண்டிய பள்ளம் போன்று தோன்றும்
யானையின் காலடித் தடத்தில் தேங்கிய நீரை.
நெல்லி - வறண்ட பாலைநிலத்தே செல்வோர், உணவும், நீரும் கிடைக்காமையால், நெல்லிக் காயைத் தின்று, பின் குழிகளில் தேங்கிய நீரினை அருந்துவர் என்பது மரபு.
Thursday, June 1, 2023
குறுந்தொகை 262 - பெருங்களிற்று அடிவழி நீர்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment