நெய்தல் - தலைவி கூற்று
காமம் கடையின் காதலர்ப் படர்ந்து
நாம் அவர்ப் புலம்பின் நம்மோடு ஆகி
ஒருபாற் படுத்தல் செல்லாது ஆயிடை
அழுவம் நின்ற அலர் வேய் கண்டல்
கழி பெயர் மருங்கின் ஒல்கி ஓதம்
பெயர் தரப் பெயர் தந்தாங்கு
வருந்தும் தோழி அவர் இருந்த என் நெஞ்சே.
-அம்மூவனார்
கடைதல் - மிகுதல். புலம்பு - வருத்தம். ஒரு பாற் படுத்தல் - ஒரு நிலையில் நிற்றல். ஆயிடை - அவ்விடம். அழுவம் - கடல். அலர் வேய் - மலர்கள் பொருந்திய. கண்டல் - தாழை மரம். மருங்கு - பக்கம். ஒல்கி - சாய்ந்து. ஓதம் -அலை. பெயர்தல் - நகர்தல்.
காதல் கூடும்போது அவரிடம் செல்கின்றது.
நாம் அவரிடத்தில் ஊடல் கொள்ளும்போது
நம்மிடம் சேர்கின்றது.
கடற்கரையில் நிற்கும் மலர்கள் நிறைந்த தாழை மரம்
அலை வரும்போது
கரையின் பக்கம் சாய்ந்திருந்து,
அலை திரும்பும் போது
அதனுடன் பெயர்ந்து, கடலின் பக்கம் சாய்வது போல
ஒரு நிலையில் நில்லாது வருந்துகிறது, தோழி!
அவர் இருந்த என் நெஞ்சு.
Thursday, June 1, 2023
குறுந்தொகை 340 - அழுவம் நின்ற அலர்வேய் கண்டல்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment