பாலை - தலைவன் கூற்று
மணி வார்ந்தன்ன மாக் கொடி அறுகை
பிணி கால் மென் கொம்பு பிணையொடும் ஆர்ந்த
மான் ஏறு உகளும் கானம் பிற்பட
வினை நலம் படீஇ வருதும் அவ்வரைத்
தாங்கல் ஒல்லுமோ பூங்குழையோய் எனச்
சொல்லா முன்னர் நில்லா ஆகி
நீர் விலங்கு அழுதல் ஆனா
தேர் விலங்கினவால் தெரிவை கண்ணே.
-பெயர் தெரியாப் புலவர்
வார்தல் - நீளுதல். மா - கருமை. அறுகை - அருகம்புல். பிணி - பின்னிய. கொம்பு - தண்டு. பிணை - பெண்மான். ஆர்தல் - உண்ணுதல். மான் ஏறு - ஆண் மான். உகளுதல் - துள்ளுதல். அவ்வரை - அதுவரை. ஒல்லுமோ - முடியுமோ. குழை - காதணி. ஆனா - நீங்காத.
பொருள் தேடிச் செல்ல திட்டமிட்ட தலைவன், அந்த எண்ணத்தை கைவிட்டுச் சொன்னது.
நீண்டு கிடக்கும் நீலமணிபோல் தோன்றும்
கருநிறக் கொடியான அருகம் புல்லின்
பின்னிப் பிணைந்த மெல்லிய தண்டினை
தன் இணையோடு வயிறார உண்டு
ஆண் மான் துள்ளி விளையாடும் காடு.
“அக்காட்டினைக் கடந்து
பொருள் ஈட்டச் சென்று வருகிறேன்
அதுவரை பிரிவைத் தாங்குவாயா?
அழகிய காதணி அணிந்தவளே!”
எனச் சொல்லி முடிப்பதன் முன்னம்,
தம் நிலையில் நில்லாது,
கண்ணீர் நிற்காமல் அழுதன.
என் தேர் கிளம்புவதையும் நிறுத்தின.
அவளின் கண்கள்.
Thursday, June 1, 2023
குறுந்தொகை 256 - தேர் விலங்கின தெரிவை கண்ணே
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment