குறிஞ்சி - தலைவன் கூற்று
இரண்டு அறி கள்வி நம் காதலோளே
முரண் கொள் துப்பின் செவ்வேல் மலையன்
முள்ளூர்க் கானம் நாற வந்து
நள்ளென் கங்குல் நம் ஓரன்னள்
கூந்தல் வேய்ந்த விரவு மலர் உதிர்த்துச்
சாந்துளர் நறுங் கதுப்பு எண்ணெய் நீவி
அமரா முகத்தளாகித்
தமர் ஓரன்னள் வைகறையானே.
-கபிலர்.
கள்வி - கள்ளத்தனம் கொண்டவள். முரண் - பகை. துப்பு - வலிமை. நாற்றம் - நறுமணம். கங்குல் - இரவு. ஓரன்னள் - ஒன்றும் தன்மையள். விரவுதல் - கலத்தல். உளர்தல் - பூசுதல். கதுப்பு - கூந்தல். அமரா - வேறுபட்ட. தமர் - சுற்றத்தவர்.
இரவினில் தலைவியை சந்தித்த தலைவன், அவளை மணமுடிக்க வேண்டும் என்று நெஞ்சுக்குச் சொன்னது.
இரண்டுவித நடத்தையை அறிந்த
கள்ளத்தனம் மிக்கவள் நம் காதலி.
எப்பகைவரையும் வெல்லும் செவ்வேல் மலையனின்
முள்ளூர்க் காட்டுத் தென்றல் போல
நறுமணம் கமழ வந்து
நள்ளிரவில் நம்மோடு ஒன்று கூட அறிந்தவள்.
நாம் சூட்டிய பல மலர்களை உதிர்த்துவிட்டு,
சாந்து பூசிய கூந்தலில் எண்ணெய் தடவி
வேறு முகம் கொண்டவளாய்
தன் சுற்றத்தாரோடு ஒன்று சேர அறிந்தவள்
விடியற் காலையில்.
மலையன் - கடையெழு வள்ளல்களுள் ஒருவனாகிய மலையமான் திருமுடிக்காரி. முள்ளூர் - அவனது ஆட்சிக்குட்பட்ட ஒரு ஊர்.
Thursday, June 1, 2023
குறுந்தொகை 312 - இரண்டறி கள்வி
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment