மருதம் - தோழி கூற்று
மயங்கு மலர்க் கோதை குழைய மகிழ்நன்
முயங்கிய நாள் தவச் சிலவே அலரே
கூகைக் கோழி வாகைப் பறந்தலைப்
பசும்பூண் பாண்டியன் வினைவல் அதிகன்
களிறொடு பட்ட ஞான்றை
ஒளிறு வாள் கொங்கர் ஆர்ப்பினும் பெரிதே.
-பரணர்.
மயங்கு - கலந்து. கோதை - மாலை. குழைய - கசங்க. மகிழ்நன் - மருத நிலத் தலைவன். முயங்குதல் - தழுவுதல். அலர் - வதந்தி. கூகை - கோட்டான். பறந்தலை - போர்க்களம். வினை வல் - போர் செய்வதில் வல்ல. களிறு - யானை. ஞான்று - பொழுது. ஆர்ப்பு - ஆரவாரம்.
தலைவன், தலைவி காதல் குறித்து ஊரில் எழுந்த வதந்தியைச் சுட்டிக்காட்டி, தலைவியை விரைவில் திருமணம் செய்யுமாறு, தலைவனுக்கு தோழி அறிவுரை சொன்னது.
பல மலர்களால் தொடுத்த மாலை கசங்கும்படி
தலைவன் தழுவிய நாட்கள் சிலவே.
அதனால் எழுந்த வதந்தியோ,
கோட்டான் பறக்கும் வாகை எனும் ஊர்ப் போர்க்களத்தில்
பசும்பூண் பாண்டியனின் தளபதி
போர்க்கலை வல்ல அதிகன்
தன் யானையோடு இறந்து வீழ்ந்தபோது
(அவனை வென்ற)
ஒளிரும் வாளேந்திய கொங்கர்கள் செய்த
ஆரவாரத்தினும் பெரிது.
பசும்பூண் பாண்டியன் - ஒரு பாண்டிய மன்னன். இவனது தளபதி அதிகன். கொங்கர்களை அடக்கி வருமாறு அதிகனை பாண்டியன் அனுப்பினான். இரு தரப்பினரும் வாகைப் பறந்தலை என்னும் இடத்தில் போரிட்டனர். அப்போரில் அதிகன் கொங்கர்களால் கொல்லப்பட்டான்.
Thursday, June 1, 2023
குறுந்தொகை 393 - வாகைப் பறந்தலைப் பாண்டியன்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment