பாலை - தோழி கூற்று
ஆசு இல் தெருவில் நாய் இல் வியன் கடை
செந்நெல் அமலை வெண்மை வெள் இழுது
ஓர் இல் பிச்சை ஆர மாந்தி
அற்சிர வெய்ய வெப்பத் தண்ணீர்
சேமச் செப்பில் பெறீஇயரோ நீயே
மின்னிடை நடுங்கும் கடைப்பெயல் வாடை
எக்கால் வருவது என்றி
அக்கால் வருவர் எம் காதலோரே.
- ஓரிற் பிச்சையார்
ஆசு -குற்றம். வியன் கடை - அகன்ற வாயில். அமலை - சோறு. இழுது - நெய். மாந்தி - உண்டு. அற்சிரம் - முன்பனிக்காலம். வெய்ய - விரும்பத்தக்க. செப்பு - பாத்திரம். பெயல் - மழை. வாடை - முன்பனிக்காலம்.
பொருள் தேடித் தலைவன் சென்றிருக்க, அவன் திரும்பி வருவதாகக் குறித்திருந்த வாடைக்காலம் எப்போது வருமென்று அறிவனிடம் அறிவுரை கேட்டு, தோழி சொன்னது.
(முக்காலமும் அறிந்த அறிவனே!)
மாசற்ற தெருவில்
நாயில்லாத அகன்ற வீட்டுவாயிலில்
செந்நெல் சோறும், வெண்ணிற நெய்யும்
(பல வீடுகளுக்குச் சுற்றித் திரியாமல்)
ஒரே வீட்டிலேயே பிச்சையாகப் பெற்று,
வயிறார உண்டு
குளிருக்கு இதமாக, கலத்தினில் சுடுநீர் பெறுவீராக!
மின்னல் இடை கொண்ட இவள்
நடுங்கும்படியான கடைசி மழை பொழியும்
வாடைக் காலம் எப்போது வரும்? கூறுவீர்.
அக்காலத்தே வருவார் எம் காதலர்.
அறிவன் - முக்காலமும் அறிந்த முனிவர். இவர்களிடம் மக்கள் அறிவுரை கேட்பர். நாயில் வியன் கடை - அந்தணர்கள் நாயும், கோழியும் இல்லத்தில் சேர்க்க மாட்டார் என்று பெரும்பாணாற்றுப்படை கூறுகிறது.
Thursday, June 1, 2023
குறுந்தொகை 277 - ஓர் இல் பிச்சை
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment