மருதம் - தலைவி கூற்று
மெல்லியலோயே மெல்லியலோயே
நல் நாள் நீத்த பழி தீர் மாமை
வன்பின் ஆற்றுதல் அல்லது செப்பின்
சொல்லகிற்றாம் மெல்லியலோயே
சிறியரும் பெரியரும் வாழும் ஊர்க்கே
நாள் இடைப் படாஅ நளி நீர் நீத்தத்து
திண்கரைப் பெரு மரம் போல
தீது இல் நிலைமை முயங்குகம் பலவே.
-நக்கீரனார்
நீத்த - நீங்கிய.. மாமை - மாந்தளிர் நிறம். வன்பு - வலிமை. செப்புதல் - சொல்லுதல். நீத்தம் - வெள்ளம். முயங்குதல் - தழுவுதல்.
தான் விரும்பிய தலைவனுடனேயே பெற்றோர் திருமணம் நிச்சயம் செய்துவிட, அச்செய்தியைக் கொணர்ந்த தோழிக்கு தலைவி சொன்னது.
மென்மையான இயல்பினளே!
(முன்னர் தலைவனோடு கூடியிருந்த)
ஒரு நல்ல நாளில்
என்னை விட்டு நீங்கியது மாசற்ற அழகு.
(ஊரார் பழிச்சொல்லை)
மனவலிமையால் பொறுத்தோமே அன்றி
வெளியே சொல்லும் நிலையில் இருக்கவில்லை.
இனி,
சிறியோரும் பெரியோரும் வாழும் இவ்வூரில்,
இடைவிடாது நீர்வெள்ளத்தால் நனைக்கப்படும்
ஆற்றங்கரைப் பெருமரம் போன்று
பெருவளத்தோடு, பழியற்ற நிலையில்
தழுவுவோம் பலமுறை.
Thursday, June 1, 2023
குறுந்தொகை 368 - நீத்தத் திண்கரைப் பெருமரம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment