Thursday, June 1, 2023

குறுந்தொகை 269 - இனி வரின் எளியள்

நெய்தல் - தலைவி கூற்று

சேய் ஆறு சென்று துனை பரி அசாவாது
உசாவுநர்ப் பெறினே நன்றுமன் தில்ல
வயச் சுறா எறிந்த புண் தணிந்து எந்தையும்
நீல் நிறப் பெருங்கடல் புக்கனன் யாயும்
உப்பை மாறி வெண்ணெல் தரீஇய
உப்பு விளை கழனிச் சென்றனள் அதனால்
பனி இரும்பரப்பின் சேர்ப்பற்கு
இனி வரின் எளியள் என்னும் தூதே

-கல்லாடனார்

சேய் ஆறு - நெடுந்தொலைவு. துனை - விரைவு. பரிதல் - ஓடுதல். அசாவாது - அயர்சியின்றி. உசாவுதல் - ஆலோசனை கூறுதல். வயம் - வலிமை. எந்தை - எம் தந்தை. யாய் - தாய். பனி - குளிர். இரும் - அகண்ட. சேர்ப்பன் - நெய்தல் நிலத் தலைவன்.

வீட்டில் தனித்திருந்த தலைவி சொன்னது.

நெடுந்தூரம் சென்று
விரைவாய் ஓடியதில் அயர்ச்சி அடையாமல்
செய்தி சொல்லும் தூதுவர் கிடைத்தால்
நன்றாய் இருக்கும்.
சுறாமீன் தாக்கியதால் உண்டான புண் தணிந்து
என் தந்தையும் நீலப் பெருங்கடலுக்குச் சென்று விட்டான்.
என் தாயும் உப்பு விற்று வெண்ணெல் வாங்கி வர
உப்பளம் சென்று விட்டாள்.
குளிர்ந்த நெடும் பரப்புடைய நெய்தல் நிலத்துத் தலைவர்
இப்போது வந்தால்
எளிதில் கிடைப்பாள்
என்னும் தூது.

No comments:

Post a Comment