Thursday, June 1, 2023

குறுந்தொகை 378 - மடமா அரிவை போகிய சுரனே

பாலை - செவிலித்தாய் கூற்று

ஞாயிறு காயாது மர நிழல் பட்டு
மலைமுதல் சிறு நெறி மணல் மிகத் தாஅய்
தண் மழை தலை இன்று ஆக நம் நீத்து
சுடர் வாய் நெடு வேல் காளையொடு
மட மா அரிவை போகிய சுரனே

-கயமனார்

மலை முதல் - மலை அடிவாரம். நெறி - வழி. தண் -குளிர்ந்த. இன்று - அசைச்சொல். நீத்து - பிரிந்து. சுடர்வாய் - ஒளி பொருந்திய. மா - மாந்தளிர் நிறம். சுரன் - பாலைநிலப் பாதை.

திருமணத்திற்குப் பெற்றோர் சம்மதம் தராததால், தலைவனுடன் தலைவி உடன்போய்விட, அவளை எண்ணி செவிலித்தாய் சொன்னது.

கதிரவன் காயாமல் மர நிழல் பரவட்டும்.
அந்த மலை அடிவாரப் பாதை
(கற்கள் இல்லாமல்) மணல் நிறைந்து இருக்கட்டும்.
குளிர்ந்த மழை பொழியட்டும்.
நம்மைப் பிரிந்து
ஒளிரும் நெடுவேல் பிடித்த காளையொடு
மடமையும், மாந்தளிர் நிறத்து அழகும் கொண்ட
அவள் சென்ற பாலை நிலப் பாதை.

No comments:

Post a Comment